2013/07/24

வழி தருமா என் விதி.....


ஏதோ வேலையென்று
என் துவிச்சக்கரவண்டி - அக்
கல்லூரிப் பாதையில் தவழ - அங்கே
கால்தடக்கி  ஒரு
கல்லூரி மாணவி
நடனமிடுவதைக் கண்டேன்...

கொடி மல்லிகையும் தோற்றிடும்
கொள்ளை அழகுடைய மங்கையவள்
கொவ்வை இதழ் குவித்து - விழுந்த
கொப்பிகளை இதமாக எடுத்திடும்
அழகை  அருகில் கண்டேன்...

அவமானத்தால் அவள்
ஆறேழு எட்டு வைத்து
திரும்பித் திரும்பிப் பார்க்க
தடம்புரண்டது என் மனம்
தாவிக்கொண்டது
இனம் புரியா ஓர்
இதமான ராகம்...

அன்று முதல் அவளது
அனைத்து அசைவுகளையும்
அறிந்து  ஆனந்தப்பட்டேன்...

ஆவணித் திங்கள் ஒன்றில்
அவள் பெயரை அறிந்து
ஆடித்தான் போனேன்...

ரோமியோ - ஜூலியெட்
சாஜஹான் - மும்தாஜ்
லைலா -  மஜ்னு
எல்லா காதலர்களும் வட
எழுத்தால் இணையாதவர்கள்
என் பெயரும் என்னவள் பெயரும் வட
எழுத்தில் இருப்பதை
எண்ணி இடிந்து போனேன்...

சிதறும் சின்னங்கள் வேண்டாம்
சிதறாத நினைவுகளுடன்
சின்னக் குடிசை ஒன்றில் - நாம்
சிறகடிக்க வழி  தருமோ என் விதி.....?
***
2004.