2013/07/24

சொந்தங்களைத் தேடி...

உறவு ஒன்றிற்காக  - என்
உயிரையே கொடுத்தேன் - அவளிடம்

வீட்டுக்கு விளக்கேற்றுபவள்
இவள்தான் என்றேன் - என் பெற்றோரிடம்

அவள் நினைவுகள் சுமக்கும்
ஆத்மாவாக - நான் இருக்க

விளக்கேற்றும் அந்த நாளை
வித விதமாக எண்ணி - அவள் இருக்க

அந்த நாளும் வந்தது...

அதிகாலை அன்னை மடியினின்றும்
ஆதவன் விழித்தெழும் வேளை

ஆனந்த மழையில்
அவள் இல்லம் திளைத்திருக்க

எங்கோ எரியப்பட்ட
எரிகணை  ஒன்று
என்னவள் இல்லம் புகுந்திற்று

எரிமலை ஒன்று தீப்பிழம்புடன்
எழுந்தடங்கியதாக அயலவர் புலம்ப
எதையும் அறியாமல்  நான் விலம்ப

கருகிய உடல்களுக்குள் - என்
காரிகையை தேடியபோது
கால் ஒன்றும் கை ஒன்றும்
கிடைத்தது  கண்டு
கனத்துப்போனது  என் இதயம்
வெறுத்துப் போனது இவ்வுலக வாழ்க்கை

மானிடா.... கூறடா....
இலங்கை வானொலி தென்றலில்
சொந்தங்களைத் தேடி
எவ்வாறு நான் விண்ணப்பிப்பதென்று....?
***
2000 ஆம் ஆண்டு தென்றல் பன்பலைவரிசையின் சொந்தங்களைத் தேடி நிகழ்ச்சிக்காக என்னால் எழுதப்பட்டது.